தோற்றம்.
தோற்றம் என்பது தோன்றுதற்குரியனவாகும். சொற்கள் பிறந்தவாறே பொருளுணர்த்திச் செல்லவில்லை. அவற்றிற்கும் பொருள் வளர்ச்சி உண்டு. பிறந்த குழந்தை ஐவகைப் பூதங்களால் பல் வகை வளர்ச்சியை அடைவதே போல், சொற்களும் புலவர்களால் பல பொருளுடையனவாக ஆக்கப்படுகின்றன.
தோன்று+அம்-தோற்றம். தோன்றுதல் என்ற பொருளில் முதலில் இருந்தது. பின்னர் ‘பிறப்பு’ என்ற பொருள் கிடைத்தது. ‘ஓங்கு புகழ்’ என வெகு தொலைவிலே உள்ளவரும் அறியும் படி நிறையும் சிறப்பினை மேலும் உணர்த்தியது. அடியேன் எண்ணம், தோன்றாமையை யுடைய உள்பொருள் தோன்றுவது என்பது ஆகும்.
எந்தப்பொருள் தோன்றும்? உள்பொருளே தோன்றும்! மீளவும் மறையும் ஆற்றல் அதற்குண்டு. ஆதலின், முக்காலத்திலும் உள்ளபொருள், தோன்றும் இயல்பினையுடையது எனக்கண்டோம்.
1. ‘உலகம்’ என்பதற்கு, என்றும் உள்ள பொருள்’ எனும் இலக்கணம் கூறுவர். ஆனால், அது (உலகம்) அறிவற்றது; தானே இயங்காதது. இதனை இயங்கச் செய்ய ஒரு தலைவன் வேண்டும். இத்தகைய பொருளுக்குத் தானே தோன்றும் ஆற்றல் இல்லை.
2. அடுத்தது, என்றும் உள்ளது.! ஆனால், தானே தோன்றும் இயல்பு இல்லாதது; பிறர் தோற்றுவிக்கத் தோன்றத்தக்கது. அது எது? அப்பொருள் உயிர்களாகிய நாம் ஆவோம். நமக்குத் தோற்றம் நம்மால் வருவதில்லை. ஆகவே, முன்னதையே {உலகம்) நாமும் ஒத்துள்ளோம்.
3. மூன்றாவதாக உள்ள ‘உள் பொருள்’ தானே தோன்றக்கூடியது. பிறர் அதனைத் தோற்றுவிக்கவில்லை. தானே தோன்றும்; தானே மறையும்! அது நம்மால் போற்றப்படுவடுவது; பேசப்படுவது; வணங்கப்படுவது.. சிறந்த உள்பொருள் கடவுள்.
கடவுள் உயர்ந்த பொருள். அதன் இலக்கணங்கள் எண்ணற்றவை. குறிப்பாக இங்கே மேற்கொள்வது ஒன்றே.
‘பிறவற்றுக்குத் தான் அடங்காது, பிற எல்லாவற்றையும் தன் கீழ் அடக்குவது’ என்பதாகும். அத்தகைய உயர்ந்த தோற்றம் பற்றி நாம் அறிய வேண்டும்.
வேதங்கள்
வேதம் நான்கு என்பர். உள் நுழைந்து கவனித்தால் வேதம் எண்ணிலாதன என்பர். வேதம் என்ற சொல்லின் பொருள், ‘முடிந்த அறிவு’என்பதாகும். வேதங்கள் என்றுமுண்டு. முற்காலத்தில் சிலர் அவற்றை வெளிப்படுத்தினர்; எதிர் காலத்திலும் அவ்வாறு வெளிப்படலாம். எல்லா மொழிகளிலும் எல்லா இடங்களிலும் அவை தோன்றியும் இருக்கலாம். இனி தோன்றுதலும் கூடும். இத்தகைய வேத முடிவுகளாகிய உபநிடதங்களுக்கும் கடவுள் அப்பாற்பட்டவன்.
ஸ்மிருதி
மனம், நினைப்பதற்குக் கருவியாயுள்ளது சில சுவடிகள், ஸ்மிருதிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஸ்மிருதி என்ற சொல்லிற்கு நினைப்பு என்பது பொருள். நினைப்புணர்ச்சி இல்லாத பைத்தியக் காரனை விஸ்மிருதி என்று சொல்வது வழக்கம்.
சொல்மாற்றம்
ச–ரவனம் =சரவணம் என்றாயிற்று.. வீதியில் செல்வோர், தமக்கு ஆகாதோரைக் கண்டால் நாணிக்கோணி முகம்கவிழ்வார்கள். அவ்வாறே சில எழுத்துக்கள் தம்முடன் பொருந்தாத எழுத்துக்களைக் கண்டால், அவை பண்டைய உருவிழந்து நிற்கும்.
சர– என்பதிலுள்ள ரகரத்தைக் கண்ட ‘வனம் என்ற சொல்லிலுள்ள னகரம் ‘ண’கரமாகத் திரிந்தது.
உத்தர+அயனம்+ உத்தராயணம். இராம+ அயனம்+ இராமாயணம். என்பதை ஒப்பிட்டுக் காண்க.
உட்கார்தல்
‘உட்காருங்கள்’, ‘உட்கார்ந்திருக்கிறான்’, உட்கார்ந்துகொண்டேன்’ என்றெல்லாம் நாம் பேச்சில் வழங்குகிறோம். இதற்கு மொழியில் வழக்கு இல்லை; ஆதாரம் இல்லை; பொருளும் இல்லை.
நிற்றல்;, இருத்தல், இருந்தான் என்பதும் அமர்ந்திருத்தல் அமர்தல், வீற்றிருத்தல் என்ற சொற்களும் சரியானவை.
‘கோருகின்றேன்’ என்ற சொல்லும் தமிழ்ச் சொல்லல்ல.
தோள்
‘தோள் என்பது தோள்பட்டை’ என்று பொதுவாகக் கூறுகிறோம். தோள் என்பது விரல்கள் வரை என்பது அறிதற்குறியது.
வேல்
வெல்லுவது, வெல்லுதலைச் செய்வது வேல் என்பர். வெல் என்பது வினைப்பகுதி. தொழிலையுணர்த்தும் பெயராகிய தொழிற்பெயர் வகையில், முதல் நிலை (வெல்) நீண்டு ‘வேல்’ என்று ஆயிற்று; எனவே முதனிலை நீண்டதொழிற்பெயர் என்பர்.
வேல் என்பது ‘ஞானம்’ என்பதே ஆகும். வடமொழியில் ஞானம் என்பது தமிழில் வேல் என்பதாம்.
‘சக்தி’ என்று வடமொழியில் கூறினால், ‘வெல்லுவதையே தன் இயல்பாக, தன்னை உடையானுக்கு இன்பம் செய்வதையே தன் இயல்பாக உடையது’ என்பது பொருள்
வேல், தெய்வம், ஞானம் என்பன ஒரு பொருட்குறித்த பல சொற்கள்.
அறியும் வழி
தொலைவில் புகை எழுதல் தெரிகிறது. அதைக் கண்டவன் தன் நண்பனிடம், ‘அங்கு நெருப்பு இருக்கின்றது’ என்றான். நண்பன் ‘தெரியாத நெருப்பை- இருப்பதாகக் கூறுகின்றாயே’ என்று கேட்பானோ? மாட்டான். ஏன்? புகை யிருந்தால் நெருப்பும் இருக்கும்; நெருப்பில்லாமல் புகை தோன்றாது என்பது தெரிந்ததுதானே!
கண்டது புகை. காணாதது நெருப்பு. கண்ணில் தெரிந்த புகையைக் கொண்டு, காணாத நெருப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
ஆற்றைத் தாண்டும் போது, ஆற்றில் புது வெள்ளம்- செக்கச் செவேரெனச் சிவந்த நீராக ஓடுகின்றது. இங்கே மழை இல்லை. பின் எப்படி வெள்ளம் வருகின்றது என்பது புலனாகின்றது.
கண்டது வெள்ளம்; காணாதது மழை.
அதுபோல் காண்பது உடல்; காணாதது உயிர். ஆயினும் உடலின் இயக்கத்தால், அசைவால், உயிர் உண்டு என்று உறுதியாக நம்புகின்றோம்.
சிவன் தந்த வேல்
சிவபெருமான் முருகனுக்கு வேல் கொடுத்தார். அம்பிகை வேல் கொடுத்தாள் என்பது உலக வழக்கு. இதில் கொஞ்சம் உண்மை காணப்படுகின்றது; பொய் மிகுதியாக இருக்கிறது. மக்களுக்கு முழு உண்மையில் கருத்து குறைவாகவே உள்ளது. வேலினைத் தந்தவன் சிவனே; அம்பிகை அல்லள்.
ஐப்பசி
இக்காலத்தில் அசுவனி (நட்சத்திரம்) முதலாக நாட்களை எண்ணுகின்றனர். முற்காலத்தில் கார்த்திகை (நட்சத்திரம்) நாளை முதலாகக் கொண்டு எண்ணினர். இதனைச் சோதிட நூலில் நன்கு அறியலாம். ஐப்பசி என்பது தமிழ்ப் பெயர். அது அசுவனி நட்சத்திரத்தைக் குறிக்கும். மாத முழு நிலவு அசுவனி நாளன்று வருகின்றது. அதனால் அசுவனி மாதம் என்பர். அதுவே ஐப்பசி எனப்பட்டது.
இம்மாதம் முதல் (அசுவனி) நாளுடன் கூடும் இயல்பு இருத்தைனால் சிறந்ததாகிறது. இம்மாதத்தில் பூர்வம், அபரம் என்னும் வளர்பிறை தேய்பிறை நாட்களில், இன்ன செய்தல்வேண்டும் என்று நம் பெரியோர் வகுத்துள்ளனர். அவர்கள் வளர் பிறையில் செய்தலையே வற்புருத்துகின்றனர்.
தேய்பிறையில் சிறந்த நாட்கள் துவாதசி, திருதியை, சதுர்தி, பஞ்சமி சஷ்டி என்பன சிறந்த நாட்கள்.
இந்நாட்களில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நம் பெரியோர்கள் கூறினர். அதை மூன்று வகையாக்கலாம்.
நல்ல எண்ணங்களை எண்ணுதல், நல்ல சொற்களைச் சொல்லுதல், நல்ல செயல்களைச் செய்தல். அவ்வாறு நடந்தால் இவ்வுலக இன்பம், வானுலக இன்பம், வீட்டின்பம் என்பனவற்றை முறையே எய்தித் துய்ப்போம்..
நல்லவை கேட்க
பார்கக் கூடாதவற்றைப் பார்க்க நேரும்போது இமைகள் என்னும் கதவுகளால் கண்ணை முடிக் கொள்ளலாம். உண்ணத் தகாத உணவை, ‘வேண்டாம்’ என்று மறுத்து வாயை மூடிக்கொள்ளலாம். இவ்வாறு வேண்டுவன- வேண்டாதனவற்றை அறிந்துகொள்ளவும், வேண்டாததை விலக்கவும் தேவையான கதவுகள் இல்லாத நிலையில் நம் செவிகள் இருக்கின்றன.
கதவு இல்லாத வீட்டில் எல்லாப் பொருளளும் நுழையும் அல்லவா?
காதும் அங்ஙனமே. கண், வாய் இவற்றிற்குக் கதவுகள் உள்ளன. காது கதவு அற்றது. அதனால் நன்மை தரும் சொற்களையும், கேட்கின்றது. திமைதரும் சொற்களையும் கேட்கவேண்டி நேர்கின்றது.
கேட்பனவற்றுள் நல்லன கண்டு அவற்றை ஏற்கவேண்டும். நல்லவற்றை விரும்பிச் சென்று கேட்டு அறிந்து பயன்பெற வேண்டும்.
கடவுளை அறிதல்.
ஒரு பொருளைப் பற்றி ஆராயப் புகுவதை மூன்று வகையில் அடக்கல்காம். 1. கண் முதலியவற்றால் கண்டு துணிதல்.
2. ஆறிவால் ஆய்தல்,
3 நம்மினும் மேம்பட்டார் அறிவால் அறிந்து கொள்ளுதல்.
அளவை நான்கு தகுதிகளில் அடங்கும். அளக்கப் படும் பொருள், அளவுகோல், அளத்தல் தொழில், அளக்கும் தலைவன் என நான்கு வகையில் கூறலாம்.
ஆறுமுகம்
ஆறுமுகம் என்பதற்கு எங்கும் உள்ளவன் என்பது பொருள்.
பெருந்திக்குகள், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கே உள்ளன. மேல், கீழ் என்ற இடங்களும் உள்ளன. இந்த ஆறு இடங்களிலும் நிறைந்தவன் ஆறுமுகன் என்பதே அப்பெயரின் விளக்கமாகும்.
ஆறாவதாகிய முகம், கீழ் நோக்கிய முகம்; ‘அதோ முகம்’ எனப்படும். அம் முகத்தை அறிந்தோர் நல்ல ஞானிகளே ஆவர். எளிய மக்கள் ஐந்து முகம் என்பர்.
நாரதர்
நாம் -மனிதன்; நாரம்- மனித சம்பந்தம்; நாரதன் – மனிதனுக்கு ஞான அறிவினை நல்குபவன் என்பது பொருள்.
மொழிப்பற்று
முருகன் என்னும் சொல்லுக்கு ‘தெய்வம்’ என்று பொருள். வட மொழியில் கூறினால்தான் நம் மக்கள் அறிகின்றனர். நம் தாய் மொழியாகிய தமிழ் மொழியை நாம் அறிகின்றோமில்லை.
‘லாயத்தில் குதிரை’ என்கிறோம். ‘லாயம்’ தமிழ்ச் சொல் அல்ல. வெவ்வேறு அரசியல் இருந்த காலங்களில் வெவ்வேறு மொழிகள் தமிழ் நாட்டில் நுழைந்தன.
ஆங்கிலகப் பள்ளியையும் அறியாது வீட்டினுள் அடங்கிக் கிடக்கும் பெண்களும், ‘ டயத்துக்கு வரவில்லையே’ என்கிறார்கள். இங்கனம் வேற்றுச் சொல் வேகமாக நம் தமிழ் மொழியில் புகுகின்றன. யாவரும் இதனைக் கவனித்தல் வேண்டும். (1941)
(வளரும்)
.